உலகம்

“இளமை திரும்புதே”- 83 வயதில் பசுபிக் பெருங்கடலை தனியாளாக கடந்து முதியவர் சாதனை!

ச. முத்துகிருஷ்ணன்

ஜப்பானைச் சேர்ந்த 83 வயதான முதியவர் பசுபிக் பெருங்கடலை தனியாளாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த கெனிச்சி ஹோரிக்கு வயது 83. இவர் தனியாளாக ஒரு படகை எடுத்துக் கொண்டு உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசுபிக் பெருங்கடலைக் கடந்து சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 19-அடி நீளம், 990-கிலோ எடையுள்ள சன்டோரி மெர்மெய்ட் III படகை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். மார்ச் மாத இறுதியில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள துறைமுகத்தில் இந்த சாதனைப் பயணத்தை துவங்கினார் கெனிச்சி ஹொரி.

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர் ஒரு புயலை எதிர்கொண்டார், ஆனால் வானிலை படிப்படியாக மேம்பட்டது. ஏப்ரல் நடுப்பகுதியில் அவர் ஹவாய் சென்றடைந்தார். பின்னர் இடைவிடாது 69 நாட்கள் பசுபிக் பெருங்கடலில் பயணித்து சனிக்கிழமை அதிகாலை ஜப்பானின் மேற்குக் கடற்கரையிலிருந்து கிய் ஜலசந்தியை வந்தடைந்தார் ஹோரி. அதன்பின் தனது சொந்த துறைமுகமான ஷின் நிஷினோமியா படகுத் துறைமுகத்திற்கு சென்ற அவரை உள்ளூர்வாசிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

83 வயதில் ஜப்பானிய சாகசக்காரர் கெனிச்சி ஹோரி பசிபிக் பெருங்கடலில் தனியாளாக பயணத்தை முடித்த உலகின் மிக வயதான நபர் என்ற சாதனையை படைத்தார். இதன்பின் பேசிய ஹோரி “நான் இன்னும் என் இளமையின் நடுவில் இருக்கிறேன். நான் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதை இது காட்டுகிறது.” என்று கூறினார்.