உலகம்

“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்

“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்

Rasus

கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

சீனாவில் புதிய தேடுபொறியை தொடங்க கூகுள் திட்டமிட்டுள்ளது என்றும், அமெரிக்காவில், அரசிய‌ல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்றும் கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, அரசியல் பாரபட்சத்துடன் கூகுள் செயல்பட்டது இல்லை என்றும், அனைத்து விதமான கருத்துகளையும் பதிவு செய்யும் தளமாகவே கூகுள் இயங்கி வருகிறது என்றும் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்தார்.

அப்போது ஆங்கிலத்தில் முட்டாள் என தட்டச்சு செய்தால், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பெயர் வருவதற்கு என்ன காரணம் என ஒரு எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, வேண்டுமென்று அப்படியொரு தவறை கூகுள் நிறுவனம் செய்யவில்லை என்றும், தற்போதைய சூழலில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு, அதன் அதிகப்படியான பயன்பாடு, மக்களின் பதிவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே தேடுபொறியில் வார்த்தைகளை சேர்ப்பதாக குறிப்பிட்டார்.

அதே போல் சீனாவில் கூகுள் நிறுவனம் தேடுபொறியை தொடங்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, உடனடியாக சீன தேடுபொறியை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை என பதில் அளித்தார். ரோஹிங்‌ய இஸ்லாமியர்களுக்கு எதிரான இனபடுகொலை விவகாரத்தில் சமூக ‌வலைதளங்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதாக ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு எழுப்பிய குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறீர்களா? என அமெரிக்க வாழ் தமிழரும், முதல் இந்தியஅமெரிக்க பெண் எம்பியுமான பிரமீளா ஜெயபால் கேள்வி கேட்டார். அதற்கு சுந்தர் பிச்சை, வெறுப்புணர்வு மற்றும் வன்முறை தூண்டும் கருத்துகள், பேச்சுகளை கூகுள் தணிக்கை செய்தே பதிவிடுகிறது என தெரிவித்தார்.