உலகம்

பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் மசூத் அசாருக்கு சிகிச்சை

rajakannan

பாகிஸ்தானின் ராவல் பிண்டியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

மசூத் அசார் தங்கள் நாட்டில்தான் உள்ளார் என்பதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி நேற்று உறுதிப்படுத்தி இருந்தார். அத்துடன் மசூத் அசார் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனால் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் குரேஷி தெரிவித்தார். 

மசூத் அசாருக்கு எதிராக இந்திய ராணுவம் ஆதாரங்களை அளித்தால், அதனை பரிசீலித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என கூறினார். மேலும், அசாருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவரை நீதிமன்றத்தின் ஆஜார் படுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில், ராவல்பிண்டியிலுள்ள ராணுவ மருத்துமனையில் சிகிச்சைக்காக மசூத் அசார் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மசூத் அசாருக்கு வழக்கமான டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பாகிஸ்தானும் மசூத் அசாரும்:

ஜம்மு-காஷ்மீரில் ஜிகாத் பிரச்சாரம் செய்ததற்காக இந்திய அரசால் 1994ம் ஆண்டு மசூத் அசார் கைது செய்யப்பட்டார். பின்னர், சில வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்தி வைத்துக் கொண்டு மெளலானா மசூத் அசாரை விடுவிக்கச் சொல்லி பயங்கரவாதக் குழுக்கள் மிரட்டினர். ஆனால், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். கடத்தப்பட்டவர்களுள் ஒருவர் தப்பினார். மற்றவர்கள் கொல்லப்பட்டனர். 

இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, 1999இல் பயங்கரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் (ஐசி814) கடத்தப்பட்டு, மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர் பாகிஸ்தான் சென்று 10 ஆயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, காஷ்மீரை விடுதலை செய்ய இந்தியாவை அழிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

மசூர் அசாத் உருவாக்கிய ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பு, 1991இல் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை அடுத்து அவரை பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்தது. இருப்பினும், அவரை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கும்படி லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2008இல் மும்பை தாக்குதல் தொடர்பாக அசாரை கைது செய்ததாக பாகிஸ்தான் அரசு அப்போது தெரிவித்தது. பின்னர், அவர் பவல்பூரில் வசித்து வந்தார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2014 ஜனவரி 26இல் கூட்டம் ஒன்றில் அவர் பேசினார். பின்னர், பதான்கோட் தாக்குதலுக்கு மசூத் அசாரும் அவரது சகோதரரும் மூளையாக செயல்பட்டனர்.

இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், புல்வாமா தாக்குதலுக்கும் இவரது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மசூத் அசாரை இந்தியா தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது.