வீடியோ ஸ்டோரி

கடனை திருப்பிச் செலுத்தாததால் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியின் வீட்டுக்கு சீல்

கலிலுல்லா

நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாததால், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியின் வீட்டுக்கு, நீதிமன்ற உத்தரவு பெற்று தனியார் நிதி நிறுவனம் சீல் வைத்துள்ளது.

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுவந்தி, சென்னையில் உள்ள இந்துஜா லைலேண்ட் ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் தனது வீட்டின் பேரில் 2016 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். சென்னை - ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள அந்த வீட்டின் பேரில் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாயை மதுவந்தி கட்டத் தவறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நிதி நிறுவனத்தினர் தொடர்ந்த வழக்கில், மதுவந்தியின் வீட்டுக்கு சீல் வைக்க மெட்ரோ பாலிட்டன் அல்லிக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்றிரவு மதுவந்தியின் வீட்டுக்கு தேனாம்பேட்டை காவல்துறையினருடன் சென்ற நிதி நிறுவன அதிகாரிகள், வீட்டுக்கு சீல் வைத்தனர். இந்த விவகாரம் குறித்து மதுவந்தியிடம் புதிய தலைமுறை சார்பில் கேட்டபோது, இந்த தகவல் தவறானது எனக் குறிப்பிட்டார்.