வீடியோ ஸ்டோரி

விருதுநகர்: காதலனின் தாயாரை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய பெண் வீட்டார்

Sinekadhara

விருதுநகரில் காதல் விவகாரத்தில் காதலனின் தாயாரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பெண் வீட்டார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சக்திசிவா - புவனேஸ்வரி ஆகியோர் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திசிவாவின் வீட்டிற்குச் சென்ற புவனேஸ்வரியின் தாய் சுதா மற்றும் உறவினர்கள், சக்திசிவாவின் தாய் மீனாட்சியை தரதரவென வெளியே இழுத்து வந்து, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

தகவல் அறிந்த காவல்துறையினர் மீனாட்சியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை தாக்கிய சுதா மற்றும் உறவினர்கள் என 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மீனாட்சியின் உறவினர்கள் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை சமரசம் செய்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்