வீடியோ ஸ்டோரி

விழுப்புரம்: காணாமல் போன பள்ளி மாணவி 3 நாட்களுக்குப் பிறகு கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

kaleelrahman

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள கொங்கராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், இவரது மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இதையடுத்து தனது மகள் காணாமல் போனது தொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் பச்சையப்பன் புகார் அளித்துள்ளார்.

அதில், செஞ்சி அருகில் உள்ள மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக பச்சையப்பன் தெரிவித்திருந்தார். புகாரைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக காவல் துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று காலை செஞ்சி அருகேயுள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு பெண் சடலமாக கிடப்பதை அறிந்த கிராம மக்கள் அந்த சடலத்தை மீட்டனர்.

அப்போது அந்த சடலம் காணாமல் போன மாணவி என்பது தெரியவந்தது. அதனையடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சந்தேகத்திற்கிடமான நான்கு நபர்களை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சடலத்துடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.