வீடியோ ஸ்டோரி

வடபழனி: பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரரை கண்டித்த அமைச்சர் சேகர்பாபு

kaleelrahman

வடபழனி முருகன் கோயிலில் மகாளய அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வருபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் ஒப்பந்ததாரரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டித்தார்.

மகாளய அமாவாசையை ஒட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இந்தநிலையில் வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், தனியார் ஒப்பந்ததாரர்கள் திதி கொடுக்க தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வடபழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பக்தரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த தனியார் ஒப்பந்ததாரரை கடுமையாக கண்டித்ததோடு, கட்டணம் வசூலிக்கக் கூடாது. இனிமேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

இதையடுத்து புதிய தலைமுறையிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு "கோயில்களில் இதுபோன்று வரும் பக்தர்களிடம் கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார் அரசு சார்பில் இதுபோன்ற கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்

அமைச்சர் ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.