வீடியோ ஸ்டோரி

நடிகர் விவேக் மரணம்: 8 வாரங்களில் அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம்

JustinDurai
நடிகர் விவேக் மரணம் குறித்து மத்திய சுகாதாரத்துறை விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
சின்னக் கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விவேக் மாரடைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி காலமானார். அதற்கு முன்பு அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், அவரது உயிரிழப்பு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும், நடிகர் விவேக் உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அளித்த புகாரில், நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தும்போது விதிகள் பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும், விவேக் மரணம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். அவரது புகார் மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.