வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் 69% நீர்நிலைகள் முழுமையாக நிரம்பின - தமிழக நீர்வளத்துறை தகவல்

JustinDurai
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, பரவலாக மழை பெய்ததால், தமிழகம் முழுவதும் உள்ள 69 சதவீத நீர்தேக்கங்கள் நிரம்பியிருப்பதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாகவும், அம்மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 90 நீர்தேக்கங்களில், 69.32 விழுக்காடு நீர்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்தேக்கங்களான பூண்டி 87.28 சதவீதம், சோழவரம் 71.32 சதவீதமும், செங்குன்றம் 83.58 சதவீதமும், செம்பரம்பாக்கம் 76.16 சதவீதமும், தேர்வாய் கண்டிகை 92.80 சதவீதமும் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டியப்பனூர் ஓடை, மோர்த்தனா, குண்டாறு, அடவிநயினார் கோயில், சோத்துப்பாறை, வர்மதாநதி, சோலையாறு ஆகிய நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.