வீடியோ ஸ்டோரி

சாதி மறுப்பு திருமணம்: சிறுநீர் குடிக்க துன்புறுத்தியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு

கலிலுல்லா

தருமபுரியில் சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் பழங்குடியின மக்களை சிறுநீர் குடிக்க சொல்லி துன்புறுத்தியதாக எழுந்த விவகாரத்தில் மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் செம்மனஹள்ளி காந்தி நகர் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மோகனா என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட அவர்கள் ஊரைவிட்டு வெளியேறினர். இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் மோகனாவின் குடும்பத்தினர், ரமேஷின் உறவினர்கள் 3 பேரை கடத்திச் சென்று சாதி ரீதியாக திட்டியதோடு, சிறுநீர் கழித்து அதனை குடிக்க சொல்லி துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பாலக்கோடு டிஎஸ்பி அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் ரமேஷின் உறவினர்கள் 3 பேர் மீதும், மோகனாவின் உறவினர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சிறுநீர் குடிக்க சொல்லி துன்புறுத்தியதாக மோகனாவின் உறவினர்கள் வீரமணி, ஆனந்தன், முரளி உள்ளிட்ட மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.