வீடியோ ஸ்டோரி

சென்னை அரசுப்பள்ளியில் சாதிரீதியாக பிரித்து பதிவேடு ஏன்? : தலைமையாசிரியர் விளக்கம்

Veeramani

சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் பதிவேட்டில் மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பிய நிலையில் அரசின் சலுகைகளை எளிதாக வழங்கவே அவ்வாறு செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகர் கோவிந்தசாமி தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து சுழற்சி முறையில் வகுப்புகளுக்கு வரவழைக்க பள்ளி நிர்வாகம் திட்டமிட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் விளக்கம் தர சென்னை மாநகர இணை ஆணையர் சினேகா உத்தரவிட்டிருந்தார்.

பட்டியலின மாணவர்களுக்கு அரசின் சலுகைகளை எளிதாக வழங்கவே சாதி ரீதியாக பிரித்து அவர்கள் பெயர்கள் பதிவேட்டில் எழுதப்பட்டதாக தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி விளக்கம் அளித்துள்ளார். தற்போது மாணவர்களின் பெயர்கள் ஆங்கில அகர வரிசைப்படி பதிவேட்டில் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சாதி ரீதியில் பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் தலைமை ஆசிரியர் தன் விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.