வீடியோ ஸ்டோரி

மதுரை: பென்னி குவிக் தங்கியதாக கூறப்பட்ட பொதுபணித்துறை கட்டிடம் இடிப்பு

Veeramani

மதுரையில் 70 கோடிருபாயில் முன்னாள் முதல்வர் கலைஞர் நுாலகம் அமைப்பதற்காக பென்னி குவிக் வாழ்ந்ததாக கூறப்பட்ட பொதுபணித்துறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் சுமார் 70 கோடி ருபாய் செலவில் சென்னையில் உள்ள அண்ணா நுாலகம் போன்ற தென் மாவட்ட மக்களுக்கு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , உலக தமிழ் சங்க வளாகம் உள்ளிட்ட 6 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் தேர்வு செய்யப்படவில்லை.

இதனையடுத்து புதுநத்தம் சாலையில் உள்ள பொதுபணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை அமைச்சர்கள் எ. வ.வேலு , மூர்த்தி ஆய்வு செய்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர் . இந்நிலையில் இந்த இடத்தில் உள்ள கட்டிடத்தில் பென்னி குவிக் தங்கியதாக கூறி நுாலகம் அமைக்க விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பொதுப்பணித்துறை ஆவணங்களின்படி கட்டடம் 1912 ல் கட்டப்பட்டதும், பென்னி குவிக் 1911 ஆண்டிலேயே இறந்து விட்ட நிலையில் அவர் இங்கு தங்கியிருக்க வாய்ப்புகள் இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது . தொல்லியல் நிபுணர்களும் பென்னி குக் இக்கட்டடத்தில் தங்கியிருக்க வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தனர்.

அதனடிப்படையில் இக்கட்டட வளாகத்தில் நுாலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு , பழைய கட்டடத்தை அப்புறப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.