வீடியோ ஸ்டோரி

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதியாக பேசிய காணொலி வெளியீடு

Sinekadhara

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பதற்கு ஒருநாள் முன்பு பேசிய காணொலி வெளியாகியுள்ளது.

1971 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா தினம் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை தொடங்கிவைத்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை இழந்து நாடு சோகத்தில் மூழ்கியிருப்பதால், இந்த விழா எளிமையாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறினார். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்தியா பெரும் பங்காற்றியிருக்கிறது என்றும், கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம் வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடைந்திருப்பதைக் கண்டு இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து பொன்விழாவையொட்டி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பேசியிருந்த காணொலி பதிவு வெளியிடப்பட்டது. தமிழகத்திற்கு புறப்படுவதற்கு முன் ஒருநாள் முன்னதாக, இந்த காணொலி பதிவு செய்யப்பட்டதாகும். அதில், வங்கதேசத்தில் நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். மேலும், அமர் ஜவான் ஜோதி அருகே இவ்விழா கொண்டாடப்படுவது சிறப்பானது என்றும் பிபின் ராவத் பேசியுள்ளார்.