குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'The multiple facets of my madurai' என்ற நூலை பரிசளித்தார். இதனால் தாம் மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக அந்த நூலின் ஆசிரியர் மனோகர் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேட்டியளித்த மனோகர் தேவதாஸ் “எனது நூலை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். பென்சில், ஸ்கெட்ச் இல்லாமல் பேனாவை கொண்டு நேர்த்தியாக ஓவியம் வரைந்தேன். கண்பார்வை குறைபாடு இருந்ததால் வரையும் விதத்தை மாற்றிக் கொண்டேன். வரையும் விதத்தை மாற்றினாலும் தரம் குறையாமல் பார்த்துக்கொண்டேன்.
மதுரை போன்று சிறப்பு வாய்ந்த இடம் எதுவுமில்லை. மீனாட்சி அம்மன் கோயிலை போன்று பிரமாதமான ஆலயம் இல்லை. மதுரை நகரின் சுற்றுப்புறமும் அவ்வளவு அழகாக இருக்கும். மதுரை நகரை ஓவியமாக வரைந்தது கடவுள் கொடுத்த வரம். தென்னிந்தியாவில் இருக்கும் பல கோயில்களை ஓவியமாக வரைவதே எனது விருப்பம். எனது புத்தகத்தை தமிழக முதல்வர், குடியரசு தலைவருக்கு வழங்கியதில் பெருமையடைகிறேன்” என்றார்.