வீடியோ ஸ்டோரி

கொரோனா தளர்வுகளுக்கு பின்னும் திறக்காத ஐடி நிறுவனங்கள் - சிறு வியாபாரிகள் ஏமாற்றம்

Veeramani

ஐடி நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு தளர்வு அறிவித்த பிறகும், அந்த உத்தரவை ஐடி நிறுவனங்கள் பின்பற்றவில்லை. அரசின் தளர்வுக்குப்பிறகு ஐடி நிறுவனங்கள் இயங்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சிறுகடைகள், வாடகை வாகனங்கள் இதனால் தவித்துவருகின்றன.

சென்னை வராத வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து கரும்புச்சாறு கடையை வைத்து காத்திருக்கிறார் சுப்பிரமணியம். 25 ஆண்டுகளாக சென்னை தரமணியில் கரும்புச்சாறு கடை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி, பிள்ளைகளை படிக்க வைத்த சுப்பிரமணியம், ஐடி நிறுவனங்கள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் வருவதில்லை என்கிறார். இவரின் வலிமிகுந்த வார்த்தைகள், துயரத்தை பகிர்கின்றன.

ஐடி நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவித்ததால், தங்கள் கவலை தீர்ந்தது என்று நினைத்த சிறு உணவகங்கள், டீக்கடை, பெட்டிக்கடைக்காரர்களும், ஆட்டோ போன்ற வாடகை வாகன ஓட்டுநர்களும், அந்நிறுவனங்கள் திறக்கப்படாததால் கவலையடைந்துள்ளனர். அதேநேரம், வொர்க் பிரம் ஹோம் முறையால் செலவு மிச்சம்பிடிக்கும் ஐடி நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை தொடரவே விரும்புவதாக ஐடி நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின் கூறுகிறார்.

கட்டுப்பாடற்ற பணிநேரம், கூடுதல் பணிச்சுமையால் தவிக்கும் ஐடி ஊழியர்களும், அலுவலகம் திரும்புவதையே விரும்புகிறார்கள். ஆனால், தொடரும் கொரோனா அலைகளைப்போல, ஐடி ஊழியர்களின் பிரச்னைகளும் இப்போதைக்கு முடிவதாக இல்லை.