தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, மதுபோதையில் சரக்கு வாகனத்தின் மீது நண்பரை தள்ளி கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடிய நண்பர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்னலஅள்ளி என்ற இடத்தில், கடந்த 5-ஆம் தேதி, வாகனம் ஒன்று மோதியதில் மேகவேலு என்பவர் படுகாயமடைந்து விட்டதாகக் கூறி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் கடந்த 22-ஆம் தேதி இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது, மேகவேலு ஒரு வாகனத்தின் மீது தள்ளப்படுவது பதிவாகி இருந்தது.
இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மேகவேலு அவரது நண்பர்கள் விஜயகுமார், செந்தில்குமார் ஆகிய மூன்று பேரும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றின் மீது மேகவேலு தள்ளப்பட, அவர் தலையில் அடிபட்டு கீழே விழுவது சிசிடிவியில் தெளிவாக பதிவாகியிருந்தது. உண்மையை கூறினால், சிக்கிக் கொள்வோம் என்பதால், நண்பர்கள் இருவரும் சம்பவத்தை மூடி மறைத்து நாடகமாடியுள்ளனர். இதனையடுத்து விஜயகுமார், செந்தில்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.