வீடியோ ஸ்டோரி

சென்னை: 151 அழகு நிலையங்கள், மசாஜ் நிலையங்களில் காவல்துறை அதிரடி சோதனை

Veeramani

சென்னையில்151 அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் நிலையங்களில் காவல் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சென்னையில் இயங்கும் அழகு நிலையங்களிலும் மசாஜ் நிலையங்களிலும் பாலியல் குற்றங்கள் நடப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. அதன்பேரில் அங்கு சோதனை நடத்திட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சென்னையில் தியாகராய நகர், வடபழனி, அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 151 அழகு நிலையங்களிலும் மசாஜ் நிலையங்களிலும் காவல்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா, பாலியல் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா என்பது பற்றி காவல்துறையினர் சோதனை நடத்தி அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் ஏதேனும் கைப்பற்றப்பட்டனவா, யாரேனும் கைது செய்யப்பட்டார்களா என்ற விவரங்களை காவல்துறையினர் இதுவரை தெரிவிக்கவில்லை.