தேர்தலையொட்டி சென்னையில் உரிமம் பெற்ற 1,749 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. விதிமீறல்கள் தொடர்பாக சென்னையில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் கடந்த 28-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான போஸ்டர், பேனர், பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சி பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேர்தலின் போது எந்த வித அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் குற்ற பதிவேடு ரவுடிகளை கண்டறிந்து போலீசார் சிறையிலும் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி முதல் இன்று காலை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 39 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொண்டு சென்றதாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவின் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உரிமம் பெற்ற 1,749 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1,332 ரவுடிகளிடம் பிரமாணப் பத்திரத்தில் 6 மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெற்றுள்ளதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.