வீடியோ ஸ்டோரி

சென்னை: மனநலம் பாதித்த 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

Veeramani

சென்னை திருமங்கலத்தில் தங்கும் விடுதியில் அடைத்து வைத்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பாடி கலைவாணர் பகுதியை சேர்ந்த 40 வயது நிரம்பிய நபர், ஜெஜெநகர் காவல் நிலையத்தில் தனது 16 வயது மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை ஏற்கெனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்திருந்த நிலையில், அது தொடர்பான போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சிறுமி மாயமான நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அதே நேரம் கடந்த 28 ஆம் தேதி சிறுமி தாமாகவே வீடு திரும்பினார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அத்துமீறியது தெரியவந்தது. இதை அறிந்த ஏழுமலையின் நண்பர்கள், அந்த சிறுமியை தங்களுக்கு அறிமுகப்படுத்த சொல்லி வற்புறுத்தி, திருமங்கலத்தில் வேலை செய்யும் இடத்திலும், கோயம்பேட்டில் உள்ள தங்கும் விடுதியில் வைத்தும், நான்கு பேரும், பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலை, அவரது நண்பர்கள் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.