வீடியோ ஸ்டோரி

'தூண்டில் பாலம் அமைச்சு கொடுங்க'-நெல்லை மீனவர்களின் 30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு?

webteam

30 ஆண்டுகளுக்கு மேலாக கடல் அரிப்பினால் உயிரிழப்பையும் பொருள் இழப்பையும் சந்தித்து வரும் நெல்லை மாவட்டம் கூட்டப்பனை கடற்கரை கிராம மக்கள், மிக நீளமான தூண்டில் பாலம் அமைத்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பெரியதாழை மீனவ கிராமம் தொடங்கி கூட்டப்புளி வரை 9 மீனவ கிராமங்கள் உள்ளது. அதில் ஒன்று கூட்டப்பணை மீனவ கிராமம். உவரி கிராமத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள இந்த கிராமத்தில் 300 குடும்பங்கள் உள்ளன. 60 பைபர் படகுகள் மூலம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கடல் அலை சீற்றமாக காணப்படுவதால் இந்த கிராம மக்கள் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே கடலுக்குள் படகில் சென்று மீன்பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடல் முகப்பிலும் கடலில் இருந்து 100 மீட்டர் உள்ளே சென்றால் ஆழி என அழைக்கப்படும் பகுதியில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கடல் அலை மிகப் பெரிய அளவில் உயர்ந்து வருவதால் படகுகள் சேதம் அடைகின்றன.

இதனால் மீனவர்கள் சிலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் கடல் சீற்றத்தால் படகில் செல்லும்போது எதிர்பாராமல் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிய மீனவர்கள் சிலர் கை மற்றும் கால்களில் மிகப்பெரிய அளவில் காயங்களை சந்தித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக பாதிப்புகளை சந்தித்து வரும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வாக தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கான ஆய்வுகள் தொடர்ச்சியாக பலமுறை நடைபெற்ற பிறகும் அதேபோல் அதிகாரிகள் ஆட்சியர்கள் அமைச்சர்கள் என நேரில் வந்து பார்த்த பிறகும் தூண்டில் பால கோரிக்கை கோரிக்கையாகவே இருக்கிறது. எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையிலும், எங்கள் உயிரையும், படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாக்கும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் இதன் மூலமாக கோரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக் காற்று வீசும் காலங்களில் கடல் அலை மிக சீற்றமாக இருக்கும். அதேபோல் ஒவ்வொரு நாளும் சந்திரன் உச்சியில் இருந்து கீழே இறங்கும் காலத்தில் கடலில் மாற்றம் ஏற்பட்டு சீற்றம் அதிகமாக இருக்கும். இந்த கடல் சீற்றத்தால் கடற்கரைகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் குழந்தைகள் விளையாடிய மைதானங்கள் இன்று கடலுக்குள் மூழ்கி கிடக்கின்றன. நாங்கள் வாகனங்கள் ஓட்டிய சாலை இன்று கடலுக்குள் கரைந்து கிடக்கின்றது.

இதுவரை நடந்த மாற்றங்கள் எல்லாம் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்குள் நடந்ததுதான். எனவே உரிய நடவடிக்கையை தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து எடுத்து மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பததே எங்களது கோரிக்கை என மீனவர்கள் தெரிவித்தனர்