வீடியோ ஸ்டோரி

சென்னை: காலாவதியான கிரீன் டீ தூள்கள் - ஆபத்தை உணராமல் எடுத்துச் சென்ற மக்கள்

கலிலுல்லா

வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை ஓரம் கொட்டப்பட்டுருந்த காலாவதியான கிரீன் டீ தூளை அவ்வழியாக செல்லும் மக்கள் ஆபத்தை உணராமல் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலை, நசரத்பேட்டை அருகே சர்வீஸ் சாலையில் மர்ம நபர்கள் சிலர் காலாவதியான கிரீன் டீத்தூள் பாக்கெட்டுகளை கொட்டி வைத்து விட்டுச் சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் டீத்தூள் பாக்கெட்டுகள் அனைத்தும் காலாவதி ஆனது என்று தெரியாமல், அதனை அவர்கள் தங்களது பைகளில் போட்டு எடுத்துச் சென்றனர். சுமார் 1 டன் எடை கொண்ட டீ தூள் பாக்கெட்டுகள் சாலையின் ஓரத்தில் மொத்தமாக கொட்டப்பட்டுள்ளது.

இந்த டீ தூள் ஆஸ்திரேலியாவில் 2003 ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு காலாவதியானதாக அந்த அட்டை பெட்டியில் அச்சிடப்பட்டிருந்தது. தயாரிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளான டீ தூள் பாக்கெட்டுகளை யார், கொண்டு வந்து கொட்டினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் காலாவதியான பொருட்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டி விட்டுச் செல்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கும் நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கம்பெனிகளிலும் சோதனை செய்வதில் சுணக்கம் காட்டி வருவது, இதுபோன்ற செயல்களுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.