டிரெண்டிங்

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்

rajakannan

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் வெறும் 23 இடங்களில் மட்டுமே வென்றது. அதேபோல், மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22இல் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய கட்சியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளது. 303 இடங்களுடன் பாஜக, 52 இடங்களுடன் காங்கிரஸ் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. திமுக 23 எம்.பிக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதனிடையே, மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகவில்லை. இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

“எங்கள் கட்சிக்கு இந்த பதவி தேவையில்லை. அப்படிபெற்றுக் கொண்டால் ஆட்சியில் பங்குபெற்றதாக பார்க்கப்படும். ஆந்திரபிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் வரை எங்களுக்கு எந்த பதவியும் வேண்டாம். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும்தான் காரணம். இரண்டாக பிரிக்கப்பட்ட மாநிலம் இது. ஆனால், சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. அதனால், காங்கிரஸ், பாஜக இரண்டிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம்” என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.