டிரெண்டிங்

பைக்கை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர்: சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

webteam

ஆம்பூரில் தனது இருசக்கர வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இளைஞர் 9 நாட்களுக்கு பிறகு சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 31-ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12 ஆம் தேதி தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் முகிலன் என்பவர் இருச் சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வழிமறித்த காவல்துறையினர் முகிலனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த முகிலன் தன்னைத் தானே மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் 91% சதவீதம் தீக்காயங்களுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 2 சிறுநீரகம் செயலிழந்து தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முகிலன் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.