டிரெண்டிங்

‘உடனே திருமணம் செய்துகொள்’ மிரட்டிய இளைஞர்.. மனமுடைந்த மாணவி விபரீத முடிவு..!

webteam

மதுரையில் காதலித்த இளைஞர் கொடுத்த திருமணம் நெருக்கடியால் 10ஆம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள காண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருடைய மகள் கவிதா (16). இவர் சாத்தங்குடி கிராமம் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து, 11ஆம் வகுப்பு படிக்கவுள்ளார். அதேபகுதியைச் பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் மகன் செல்லப்பாண்டி (23). இவர் சரக்கு வேன் ஓட்டுநராக உள்ளார். மாணவியும், சிறுமியுமான கவிதாவை செல்லப்பாண்டி காதலித்து வந்துள்ளார். அதேபோல், அந்த மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் கவிதா வீட்டிற்கு தெரியவர, பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று செல்லப்பாண்டி கவிதாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நெருக்கடி கொடுத்துள்ளார். இல்லையென்றால் தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். அத்துடன் ஆத்திரத்தில் மாணவியை திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த கவிதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களுடைய மகள் மரணத்திற்கு காரணமான செல்லப்பாண்டியை கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் செல்லப்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.