டிரெண்டிங்

”இதுதான் BFF Goals” : உற்றத்தோழிக்காக கருவை சுமந்த பெண்.. ஒரு வாடகைத்தாயின் நெகிழ்ச்சி கதை

JananiGovindhan

சமூக வலைதளங்களில் டாக் ஆஃப் தி டவுன் ஆக அண்மை நாட்களாக இருந்து வருவது வாடகைத்தாய் விவகாரம்தான். பிரபலங்களான நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

நெடிய சர்ச்சைகளுக்கு பிறகு, நயன்தாராவும் தானும் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததாகவும் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியிருந்தன. இருப்பினும் அந்த விளக்கம் அதிகாரப்பூர்வமானதுதானா என்பது இதுகாறும் உறுதிபட வெளியாகவில்லை.

ALSO READ: 

இப்படி இருக்கையில், உலகின் பல பகுதிகளில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறித்த பல்வேறு செய்திகளும் தொடர்ந்து வெளியான வண்ணமே உள்ளன. அந்த வகையில், கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 61 வயது பெண்மணி ஒருவர் தனது பேத்திக்காக வாடகைத்தாயாக இருந்தார். 

அதேபோல, கடந்த 2021ல் ட்ரேசி ஹசல் என்ற பெண் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளரான தனது சகோதரருக்காக வாடகைத்தாயாக இருந்தார். இப்படியான பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் உலகளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில், கர்ப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய உற்றத் தோழிக்காக பெண் ஒருவர் வாடகைத் தாயாக இருந்த நெகிழ்ச்சியும் நடந்திருக்கிறது. அதன்படி, லண்டனைச் சேர்ந்த கேஸ்ஸி புஷ் என்ற பெண்ணுக்கு கடந்த 2016ம் ஆண்டு கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

2B என்ற கட்டத்தை புற்றுநோய் கர்ப்பப்பை வரை பரவியதால் மேற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) காரணமாக கேஸ்ஸி தனது 32வது வயதிலேயே மெனோபஸ் கட்டத்தை அடையக் கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் கேஸ்ஸியால் இனி குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கிறது. 

இதனால் கேஸ்ஸி - ஜேக் தம்பதி கடும் மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இருப்பினும் 2017ம் ஆண்டு சமயத்தில் எப்படியாவது தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ற எண்ணத்தை கேஸ்ஸி தனது கருமுட்டையை பதப்படுத்தி இருந்திருக்கிறார். இப்படியான சூழலில் கேஸ்ஸியின் உற்றத் தோழியும் 2 குழந்தைகளுக்கு தாயுமான பெக்கி சிடெல் என்பவர் கேஸ்ஸிக்கு வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தர முன்வந்திருக்கிறார். இதற்கு பெக்கியின் கணவர் ஜேமியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

இதனையடுத்து, கடந்த 2021 செப்டம்பரில் கர்ப்பம் தரித்த பெக்கிக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு பார்னபி (Barnaby) என பெயரிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள கேஸ்ஸி-ஜாக் தம்பதி, “பெக்கி மற்றும் ஜேமிக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்களுக்கென குழந்தை கிடைத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி” எனக் கூறியிருக்கிறார்கள். அடுத்தபடியாக கேஸ்ஸியும் ஜாக்கும் பார்னபியின் பெற்றோர் தாங்கள்தான் என பதிவு செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக மெட்ரோ செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ALSO READ: