டிரெண்டிங்

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார்: கவுதம் கம்பீர்

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார்: கவுதம் கம்பீர்

webteam

துண்டு பிரசுர விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால், தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, 5 கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான அதிஷி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், கவுதம் காம்பீர் விநியோகித்த துண்டு பிரசுரத்தில், தன்னைப் பற்றி மிக மோசமாக அவதூறு பரப்பப்பட்டிருப்பதாக, அதிஷி புகார் தெரிவித்திருந்தார். காம்பீர் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான துண்டு பிரசுரத்தில், தன் ஒழுக்கப் பண்புகள் குறித்து மிகுந்த மோசமான வகையில் அவதூறு வார்த்தைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர் கண்ணீர் விட்டார்.  இத்தகைய எண்ணங்களுடன் கூடிய காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றச்சாட்டை மறுத்துள்ள காம்பீர், இதை நான் செய்ததாக நிரூபித்தால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால் அரசியலைவிட்டு அவர் விலகத் தயாராக இருக்கிறாரா? என கவுதம் கம்பீர் சவால் விடுத்துள்ளார்.