டிரெண்டிங்

கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி... தலைமறைவான ஆண் நண்பர் கைது..!

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான மனைவியின் ஆண் நண்பரை, 2 மாதத்திற்கு பிறகு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் (39). வீடியோ கிராபர் ஆக பணிபுரிந்து வரும் இவருக்கும் காயத்ரி (31) என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கணேஷ் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறியதை அடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 
இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் காயத்ரிக்கு யாசர் என்ற ஆண் நண்பர் இருப்பதாகவும் கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டி அதன்படி யாசரின் நண்பர்கள் 2 பேரை வைத்து கணேஷ் தூங்கும் நேரம் அவரை சுத்தியால் தலையில் கொடூரமாக தாக்கிவிட்டு பின் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக நாடகம் ஆடியதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காயத்திரி, யாசரின் நண்பர்களான கருணாகரன் மற்றும் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட யாசர் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ர் மதுரையில் இருந்த யாசரை கைதுசெய்த போலீசார், அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.