டிரெண்டிங்

வரதட்சனை கொடுமை: கணவருடன் ஏற்பட்ட தகராறில் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த மனைவி

kaleelrahman

விழுப்புரம்: மரக்காணத்தை அடுத்த முருக்கேரில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், 6 மாத கைக்குழந்தையுடன் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முருக்கேரியில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி யுவராணி 6 மாத கைக்குழந்தையுடன் வசித்து வந்தனர். முருக்கேரி பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்துவந்த கோபாலகிருஷ்ணன் வரதட்சனையாக கொடுக்க வேண்டிய தங்க நகையை கேட்டு அடிக்கடி மனைவியுடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மீண்டும் கணவன் மனைவிக்குள் வரதட்சணை நகை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் தனது மனைவியுடம் சண்டையிட்ட பிறகு முருக்கேரி பகுதியில் உள்ள ஜவுளி கடையை திறக்க தனது தந்தை ஜோதியுடன் சென்றுள்ளார். கணவன் வீட்டை விட்டு சென்ற பிறகு யுவராணி தனது 6 மாத பெண் கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜவுளி கடைக்கு சென்ற மாமனார் ஜோதி மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது மருமகளை காணாததால் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் வீட்டிற்கு பின்புற பகுதியில் போய் பார்த்த போது மருமகளும் குழந்தையும் கிணற்றில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ள பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி ஆறுமாத கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.