டிரெண்டிங்

விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? - திருமாவளவன்

விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? - திருமாவளவன்

webteam

விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். 

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிதம்பரத்தில் தொல். திருமாவளவன்  போட்டியிடு வார்கள் என்று அவர் அறிவித்தார். இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், தனி சின்னத்திலும் விழுப்புரத்தில் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலும்  போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக திருமாவளவன் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் “தனிச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தும், இந்நாள் வரை ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை. முதலில் மோதிரம் சின்னம் கேட்டோம், அது வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், வைரம் சின்னத்தை கேட்டோம். அது கிடைக்கும் என உறுதியளித்தார்கள். ஆனால், 2 நாட்கள் கழித்து அதுவும் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகக் தெரிவித்தனர். மூன்றாவதாக பலாப்பழ சின்னம் கேட்டோம். அதுவும் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்றனர். தற்போது நான்காவதாக டேபிள் சின்னத்தை கேட்டிருக்கிறோம். 4-5 நாட்கள் ஆகி விட்டன. இன்னும் அச்சின்னத்தை ஒதுக்கவில்லை. இப்போது வேறொரு பட்டியலை அனுப்புங்கள் என்கின்றனர்.

இந்த நிமிடம் வரை சின்னம் ஒதுக்கப்படாததற்கு ஏதேனும் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்குமா என்ற ஐயம் உள்ளது. இருந்தாலும் அதனை உறுதியாக சொல்ல ஆதாரங்கள் இல்லை. ஒவ்வொரு முறையும் நான் போட்டியிடும் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. அதனால், இரு தொகுதிகளிலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவது நல்லதல்ல.

இனி காத்திருக்க முடியாது. குறைந்த நாட்களே உள்ளதால், தனிச்சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது கேள்விக்குறி. விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் கள நிலவரம் வெவ்வேறானவை. விழுப்புரத்தில் வீம்புக்கு தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைய விருப்பமில்லை. 

ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவோ, திமுக அழுத்தம் காரணம் எனவோ எண்ண வேண்டாம். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டால் தனித்தன்மையோடு சுதந்திரமாக இயங்க முடியும். அதற்கு கட்சி நிர்வாகிகள் ஆதரவு அளிக்க வேண்டும்.” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.