தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
2014ஆம் ஆண்டு முதல், தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியில் இருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால், தனது கட்சிப் பதவியையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தமிழகத்திற்கு புதிய தலைவரை தேர்வு செய்தவற்கான பணியில் பாரதிய ஜனதா மேலிடம் ஈடுபட்டுள்ளது. அதன்படி தற்போது பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளராகவும், கட்சியின் மாநிலச் செயலாளராகவும் உள்ள கே.டி.ராகவன், அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் பாரதிய ஜனதாவின் மாநிலச் செயலாளராக உள்ள வானதி சீனிவாசனின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் இருந்து விலகி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதாவில் இணைந்த நயினார் நாகேந்திரனின் பெயரும் இந்தப் போட்டிக்கான பட்டியலில் இருப்பதாக பேசப்படுகிறது. இவர் தற்போது தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் துணைத் தலைவராக உள்ளார்.
புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம், பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் சந்தோஷ், தேசியச் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் கருத்து கேட்டுள்ளனர். அதனடிப்படையில் தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாளில் அக்கட்சி மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.