டிரெண்டிங்

மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய பெண்கள் யார்? வெளியான வீடியோவால் பரபரப்பு...!

kaleelrahman

மதுரவாயலில் வீட்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த இரண்டு பெண்கள்... கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், மெட்ரோ நகர் பகுதியில் உள்ள வீட்டில் அழகர்சாமி என்பவர் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு சங்கர், சதாம்உசேன் ஆகிய இரண்டு பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று உணவு சாப்பிடுவதற்காக அலுவலகத்தை பூட்டி விட்டு இருவரும் வெளியே சென்று விட்டனர்.

சிறிது நேரத்தில் வீட்டின் வரண்டாவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததை அடுத்து இருவரும் அங்கு வந்து பார்த்தபோது சங்கர் என்பவரின் மோட்டா ர்சைக்கிள் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சதாம்உசேனின் வாகனத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டது. 

 இதையடுத்து தீயை அணைத்த அவர்கள் இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததன் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முகத்தை மூடியபடி மொபட்டில் வந்த இரண்டு பெண்கள் அந்த வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு ஒருவர் மட்டும் இறங்கி உள்ளே சென்று அங்கே நிறுத்தியிருந்த வாகனத்தை தீவைத்து கொளுத்தி விட்டு பின்னர் அங்கிருந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. 

 இதைத்தொடர்ந்து தீவைத்து கொளுத்திய பெண்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள் என்பது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.