தேவையான நேரத்தில் தங்கள் பலத்தை நிரூபிப்போம் என அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, " நான் ஏற்கனவே பொதுச் செயலாளர் சசிகலா சார்பாக மேலூர் மேடையில், நீதி விசாரணை வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தேன். நீதி விசாரணை நடைபெற்றால் பல்வேறு கேள்விக்கு சரியான பதில் கிடைத்து, பொதுச் செயலாளர் சசிகலா பத்திரைமாத்து தங்கம் என்பது வெளிப்படும்.
ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பில் தவறில்லை. ஆனால் அவசர கதியில் சுயநலத்திற்காக தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள செய்யப்படும் போது அது சரியாக அமையாது. ஜெயலலிதா ஏதும் உயில் வைத்து இருக்கிறார்களா? உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சசிகலா சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இனி ஆபரேஷன் நடக்கும். எம்ஜிஆர் மறைவிற்கு பின் அதிமுக பிளவுட்டு இணைந்தபோது, அதில் தொண்டர்கள் விருப்பம் இருந்தது. அதில் சுயநலம் இல்லை. அது இயற்கையானது. ஆனால் வியாபார நோக்கத்தோடு உடன்படிக்கை போல, ஏதோ சிலர் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என அதிமுக அணிகள் இணைந்தால் அதன் ஆயுட் காலம் நீடிக்காது. தொண்டர்களின் விருப்பத்தையே நாங்கள் செயல்படுத்துவோம். மேலூர் கூட்டத்தில் நிறைய எம்எல்ஏ-க்கள் வந்தார்கள். இன்னும் நிறைய எம்எல்ஏ-க்கள் ஸ்லீப்பர்செல் போல இருக்கிறார்கள். தேவையான நேரத்தில் பலத்தை நிரூபிப்போம். விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" என்றார்.