2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆய்வுப் பணிகளை துவங்கி உள்ளதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' தமிழகத்தில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் முதல் பெட்டிக்கடை வைத்திருப்பவர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மோடி அரசு கொரோனா காலத்தில் நிதியை ஒதுக்கியதாக தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பயனையும் அடையவில்லை. 6 மாத காலத்திற்கு வங்கிக்கடனை ரத்து செய்ய செய்ய வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான ஆய்வுப் பணிகளை துவங்கியுள்ளோம். நடைபயணம், அரசியல் மாநாடு போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் 6 தலைநகரம் வைத்துக்கொண்டாலும் தவறில்லை. பொது நன்மை கருதி அரசு தெரிவிக்கும் அறிவிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் உணர்வை மனதுக்குள் வைத்துக்கொண்டு மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதிப்பில்லாமல் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.