புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' வாயிலாக ஏழை, எளியவர்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தாதகப்பட்டியில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த ஓட்டுநர் ராஜா என்பவரின் குடும்பத்திற்கு, பெஸ்ட் கல்வி அறக்கட்டளை மூலம் இரண்டு மாதங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான செல்வன் பாண்டியன், ஊரடங்கால் வருவாய் இழந்து தவிப்பதாக புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை வாயிலாக உதவி கோரியிருந்தார். இதையடுத்து, 'குடை வீடு' அருண் குமார் என்ற சமூக ஆர்வலர் தனது சொந்த செலவில்,15 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் பிரம்மபுரத்தில் 3 குழந்தையுடன் தவித்து வந்த செல்வி என்பவர் துளிர்க்கும் நம்பிக்கை குழுவினரிடம் உதவி கோரினார். இதனையறிந்த சத்துவாச்சாரியில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி - மணிமேகலை தம்பதியினர் 2 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கினர். திண்டுக்கல் மாவட்டத்தில் தாயுடன் வசித்து வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராஜேந்திரனுக்கு புதிய தலைமுறை வாயிலாக உதவிக்கரம் கிடைத்துள்ளது. பசியில்லா நத்தம் அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் மதுசூதனன் என்பவர், அரிசி மற்றும் 2 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், ஒரு மாத வாடகையை வழங்கினார்.
இதே போன்று, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாற்றுத்திறனாளியான பழனிமுத்து-கவுரி தம்பதிக்கு, கிராமியம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவி கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்