முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் நாளை வருவதையொட்டி நகர் முழுவதும் 3-அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4 ஐ.ஜி., 2 டிஐஜி, 12 மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5 ஆயிரம் காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் மட்டுமின்றி, கடலோர காவல்படை, கப்பற்படை வீரர்களும் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலாமின் 2-ஆவது நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தையடுத்த பேக்கரும்பில் 16 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து வைப்பதற்காக நாளை ராமேஸ்வரம் வரும் பிரதமர் மரக்காயர்பட்டினத்தில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, 56 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகுந்தராயர்சத்திரம் - அரிசல் முனை சாலை நாளை பிரதமர் முன்னிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படவுள்ளது.
இதனிடையே பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் கடற்பகுதியில் இன்றும், நாளையும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டபம் அகதிகள் முகாமிலிருப்பவர்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.