டிரெண்டிங்

அது பாம்புகளா? இல்ல பொட்டேட்டோவா? - நெட்டிசன்களை அதிர்ச்சியாக்கிய வைரல் வீடியோ

Sinekadhara

பாம்பு என்று சொன்னாலே பலருக்கும் பயம்தான். அதனால்தான் என்னவோ ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்ற பழமொழி உருவாகியிருக்கலாம். பாம்புகளில் கொடிய விஷத்தன்மை உடைய பாம்புகளும், விஷமற்ற பாம்புகளும் உள்ளன. ஆனால், இப்போது சிலர் பாம்புகளையே வீட்டில் செல்லப்பிரணிகளாக வளர்க்கின்றனர். பெரிய சாக்கு நிறைய பாம்புகளை ஒருவர் பயமின்றி கொட்டும் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையங்களில் பரவி மீண்டும் வைரலாகி வருகிறது.

வீடியோவில் பார்ப்பதற்கு வனப்பகுதி போல் தெரிகிறது. அங்கு பெரிய சாக்குநிறைய இருக்கும் உருளைக்கிழங்குகளை தரையில் கொட்டி கலைத்துவிடுவதைப்போன்று பாம்புகளை கொட்டி கையால் அசாலாட்டாக கலைத்துவிடுகிறார் ஒரு நபர். ஆரம்பத்தில் அந்த பையை தூக்கி கொட்டுவதற்கு அந்த சிரமப்படுவது போல் தெரிகிறது. ஆனால் சில நொடிகளில் படபடவென வெளியே வந்துவிழும் எண்ணற்ற பாம்புகள் பார்ப்போரை பயமுறுத்தும் வண்ணம் அங்குமிங்குமாக ஓடுகிறது.

கீழே விழுந்த பாம்புகளில் சில ஒன்றுடன் ஒன்று சிக்கியும் இருக்கிறது. அவற்றைத்தான் அந்த நபர் வெறும் கைகளாலேயே எந்த சலனமுமின்றி பிரித்துவிடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. snake world என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. பலராலும் இதை நம்பமுடியவில்லை. ”அவை என்னவகை பாம்புகள்? ஏன் அவை அந்த நபரை கடிக்கவில்லை?” என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் ”பை நிறைய ஒன்றுமில்லை” என்று நகைச்சுவையாகவும், ஒருவர் “அந்த நபர் சரியான செயலை செய்துள்ளார்” என்றும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை தற்போது கிட்டத்தட்ட 51 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.