தன் மீதான பிடிவாரண்ட்டை எதிர்த்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி மதுரைக்கு செல்வதற்காக விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பானது. இதையடுத்து தன்னை தாக்கியதாக விஜயகாந்த் மீது அந்த செய்தியாளர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அப்போது விஜயகாந்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு நேற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால் வழக்கில் ஆஜராகவில்லை. இதனால், விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.