டிரெண்டிங்

8 குழந்தைகளோடு வறுமையில் வாடிய குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

kaleelrahman

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 8 குழந்தைகளுடன் வறுமையில் வாடும் குடும்பத்தை தத்தெடுத்து, முதல் கட்டமாக ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தில் இருளர் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் கணவனை இழந்து 6 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் என 8 குழந்தைகளோடு வறுமையில் வாடிவரும் தாயின் சூழ்நிலையை விஜய் மக்கள் இயக்கத்தினர் அறிந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான உளுந்தை சத்யா, காக்களுர் ஆனந்தன், பூவை. மோகன், கார்த்தி, பிரபாகரன், கோபி, ஜெய், அஜித் மற்றும் ஆபேல் ஆகியோர் அக்குடும்பத்தை தத்தெடுத்து முதல் கட்டமாக ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினர்.

பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடிய குடும்பத்திற்கு வாழ்வாதாரம் அளித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அக்கிராமத்தினர் நன்றியை தெரிவித்தனர்.