டிரெண்டிங்

எதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்

webteam

’’எந்த பொத்தானை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்கு விழுவதாக தகவல் வெளியாகியுள்ளது’’ என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கினர். அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோரும் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரியலூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தப்பின் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறும்போது, அவர், ‘’எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே விழுவதாக செய்தி வருகிறது. இது உறுதிப் படுத்தப்படாதத் தகவல் என்றாலும் தேர்தல் அதிகாரிகள் இதை கண்காணிக்கவேண்டும். பல பகுதிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்’’ என்றார்.