சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேர்மையானவர், இதனை நான் எங்கு வந்தும் சொல்ல தயார் என மதிமுக பொதுசெயளாலர் வைகோ தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதில் பல மர்மங்கள் ஒளிந்திருப்பதாக கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமும் விசாரணை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கடந்த 20-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தபோது ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சுயநினைவோடு இருக்குபோது அவரே வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை” எனக் கருத்தை முன் வைத்தார்.
இதையடுத்து விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பதிலில் சந்தேகம் இருப்பதால் அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேர்மையானவர், இதனை நான் எங்கு வந்தும் சொல்ல தயார் என மதிமுக பொதுசெயளாலர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளை பாதுகாக்கத் தவறினால், அனைவரும் மத்திய அரசு பணிக்கு சென்றுவிடுவார்கள் எனவும் வைகோ தெரிவித்தார். சதி என்ற சொல்லை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பயன்படுத்துவது நியாயமற்றது. அப்பல்லோவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு என்ன வந்தது என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.