நெரிசலான இடங்களில் வாகனங்களை நடத்துவது என்பது ஒரு விதமான சவாலான காரியம்தான். ஆனால், பார்க்கிங் வசதிகள் கொண்ட இடங்களில் முறையாக வண்டியை பார்க் செய்த போதும் அபராதம் விதிப்பதெல்லாம் சரியான நடவடிக்கையாகவா இருக்க முடியும்? அப்படியான ஒரு சம்பவம்தான் லண்டனைச் சேர்ந்த முதியவருக்கு நடந்திருக்கிறது.
ஜூலியன் கிரிஃபித்ஸ் என்ற 59 வயதை உடைய நபர் ஒருவர் Swansea-ல் உள்ள Parc Tawe Retail Park-க்கு சென்றிருக்கிறார். அங்கு தன்னுடைய ரெனால்ட் க்ளிப் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருக்கிறார். அதுவும் வேறு வாகனங்கள் அந்த வழியே செல்வதற்கு எந்த இடையூறும் இல்லாமலேயே தனது காரை ஜூலியன் நிறுத்தி வைத்திருக்கிறார்.
இருப்பினும் பார்க்கிங் எல்லைக்குட்பட்ட பகுதியை தாண்டி வெறும் மூன்று இன்ச் அளவுக்கு கார் வெளியே நிறுத்தப்பட்டதாக கூறி ஜூலியனுக்கு பார்க்கிங் நிர்வாகம் 100 பவுண்ட் அபராதம் விதித்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 8,813 ரூபாய்.
இதனை அறிந்ததும் ஜூலியன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள ஜூலியன் கிரிஃபித்ஸ், “அந்த பார்க்கிங் பகுதி முழுமையாகவும், சதுரமாகவும் இருக்கும் என ஒரு போதும் உணரவில்லை. ஒருவேளை என்னுடைய காரால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போனால் கூட பரவாயில்லை.
ஆனால் இந்த சின்ன காரணத்திற்காக எனக்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். இது முட்டாள்தனமானது. இதன் மூலம் பார்க்கிங் நிர்வாகங்கள் பணம் சம்பாதிப்பதற்காக இப்படியான வேலைகளை செய்வது என்பது உறுதியாகியிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, 3 இன்ச் வெளியே காரை நிறுத்தியதற்கெல்லாம் அபராதம் கட்ட முன்வராத ஜூலியன் இது குறித்து புகாரும் அளித்திருக்கிறார்.