சென்னை மாங்காட்டில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளிகள் இருவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லிமாநகர் செல்லும் பிரதான சாலையில் தற்போது புதிதாக சாலை போடும் பணி நடந்துவருகிறது. முதற்கட்டமாக சாலையை தோண்டி கற்களை கொட்டி சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் 8 கூலித் தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.
சம்பவத்தின்போது லாரியில் வந்த ஜல்லி கற்களை சாலையில் கொட்டி சரிசெய்து வந்துள்ளனர். அப்போது லாரி, மேலே சென்ற மின்சார கம்பியில் உரசியுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் கன்னியப்பன், பச்சையப்பன் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்ததில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாங்காடு காவல்துறையினர் கொண்டு சென்றனர். உயிரிழந்த கன்னியப்பன், பச்சையப்பன் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில் மின் கம்பிகள் அனைத்தும் தாழ்வாக இருப்பதாகவும் தற்போது விபத்து நடைபெற்ற உயரழுத்த மின் கம்பியை கூட சாலையில் சற்று ஓரமாக அமைக்கக்கோரியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுபோன்று மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.