டிரெண்டிங்

”செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் மட்டுமே வாழ்க்கையில்ல” - தன்னைத்தானே மணந்த சீரியல் நடிகை!

JananiGovindhan

குஜாரத் மாநிலத்தைச் சேர்ந்த பிந்து என்ற இளம்பெண் சோலோகாமி முறையில் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பரபரப்பே இன்னும் அடங்காத வேளையில், பிரபல டிவி சீரியல் நடிகை தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டதாக அறிவித்திருப்பது விமர்சனங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

Diya Aur Baati Hum என்ற இந்தி சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமாகவே வலம் வருகிறார் கனிஷ்கா சோனி. இதுபோக அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஸ்களை ஷேர் செய்து லைம் லட்டிலேயே இருந்து வருகிறார்.

இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமமும் வைத்தபடி போட்டோ பகிர்ந்ததோடு ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார். சீரியலுக்கான கல்யாண வேஷமா அல்லது நிஜமாவே கல்யாணம் ஆகிவிட்டதா எனவும் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

கனிஷ்காவின் அந்த பதிவில், “நான் என்னையே திருமணம் செய்துக் கொண்டேன். என் கனவுகள் எல்லாவற்றையும் நானே பூர்த்தி செய்துகொண்டேன். அதனால் என்னை நானே மிகவும் காதலிக்கிறேன். எனக்கு யாரும் வேண்டாம். எந்த ஆணின் துணையையும் நான் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும் தனியாக இருக்கவே நான் விரும்புகிறேன். சிவன் சக்தி என எல்லாம் என்னுள்தான் இருக்கிறது. நன்றி.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவை கண்ட பலரும் சோலோகாமி முறை இந்தியாவின் கலாசாரத்தை சீரழிப்பதாக உள்ளது என விமர்சனங்களை குறிப்பிட்டு வந்தனர். இதனையடுத்து “சுயநினைவோடுதான் இந்த முடிவை எடுத்தேன்.

நான் நினைத்தபடி எந்த ஆணையும் இதுநாள் வரை சந்திக்கவில்லை. ஆகையாலேயே தனியாக வாழ்வதென முடிவெடுத்தேன். இந்திய கலாசாரத்தை பெரிதளவில் மதிக்கிறேன். ஆனால் திருமணம் என்பதும் வெறும் உடலுறவு தொடர்புடையது மட்டுமல்ல. அதில் காதலும் நேர்மையும் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் அந்த மாதிரி யாரும் இருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை.

நான் என்னை நானே திருமணம் செய்துக் கொள்வதாக போஸ்ட் போட்டதற்கு குடித்துவிட்டு பகிர்ந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. தனியாக வாழ முடிவெடுத்தே என்னை நானே திருமணம் செய்துக்கொண்டேன்.” என்றுக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.