உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள கொங்கு மண்டல விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுதான் தமிழகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டிய அரசோ, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களுக்கு எதிரான பன்முனைத் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் விரோதமாக மேற்கொள்ளும் போக்கை ஒரு கொள்கை முடிவாகவே எடுத்துவிட்டது. தற்போது, கொங்கு மண்டல பகுதி விவசாய பெருமக்கள் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியால் நிலைகுலைந்து போயுள்ளனர்.
பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ள உழவர்கள், நில உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த உயர் மின்கோபுரங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் நிலத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது.
இதனால் நிலத்தின் மதிப்பு குறைந்ததற்கு இழப்பீடு வழங்க கோரியும், உயர் மின்கோபுரங்கள் அமைந்துள்ள இடத்திற்கு ஆண்டு வாடகை வழங்க கோரியும் ஆறாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்தை அரசு உதாசினப்படுத்தி வருகிறது. காவல்துறை மற்றும் வருவாய் துறையினரை வைத்து அரசு விவசாயிகளை மிரட்டி வருகிறது. விவசாயிகளின் உணர்வுகளை நசுக்குவதால் தமிழகம் பெரும் பாதிப்பை சந்திக்கும். உயர் மின் கோபுரங்கள் அமைபதற்கு பதிலாக புதை மின்வடம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.