டிரெண்டிங்

தமிழ்த்தாய் வாழ்த்து: விஜயேந்திரரால் சங்கடப்பட்ட டிடிவி தினகரன்!

webteam

தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சங்கடப்படுத்துவதாக ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காதது சங்கடப் படுத்துகிறது.


 

அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மக்களால் மதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு, பல லட்சம் பேரால் வணங்கப்படும் ஒருவர் மதிப்பளிக்க தவறுவது வேதனைக்குரியது 

இது தவறான எண்ணப்போக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் அபாயமிருக்கிறது. எதிர்காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல்
பார்த்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.