இடைத்தேர்தல் விவகாரத்தில் வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் பண்ணுகிறதோ என எண்ணத் தோன்றுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த பிறகு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு அதிகமாக பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை’ குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பருவமழை அறிவிப்பு திட்டமிட்டு அரசுக்கு ஆதரவாக தெரிவிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
‘ரெட் அலர்ட்’ தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிடி தினகரன், “தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்று நினைத்துக் கொண்டிருந்தோம். வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பையே நம்ப முடியவில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் விவகாரத்தில் வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ எனத் தோன்றுகிறது. ‘ரெட் அலர்ட்’ கொடுத்த நிலையில், நேற்று சென்னையில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.