ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொடர்ந்து, மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 4 மாதங்கள் உள்ளன. இந்த நான்கு மாதங்களில் அரசியல் களத்தில் எத்தனை காட்சிகள் அரங்கேறப்போகிறதோ தெரியவில்லை. ஏனெனில், தேர்தலுக்கான கூட்டணி குறித்து எந்தவொரு கட்சியும் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை.
ஆளும் பாஜக தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் தலைமையில் ஓர் அணியும் அமையும் என்ற நிலையில்தான் தற்போது உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்றன.
இந்த முயற்சியை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தொடங்கினார். தொடங்கிய வேகத்தில் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார். அப்போது, திமுகவும் மூன்றாவது அணியில் இணையும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.
ஆனால், தொடங்கிய வேகத்திலேயே இந்த முயற்சிகள் மந்தமடைந்தது. பின்னர் ஒருமாதிரியாக காங்கிரஸ் விழித்துக் கொண்டது. தன்னுடைய கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், நேரடியாக அந்த முயற்சியை காங்கிரஸ் செய்யவில்லை.
பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி என்ற முழக்கத்தினை கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த முயற்சியை கையிலெடுத்தார். அதிரடியாக தலைவர்களுடன் சந்திப்புக்களை நிகழ்த்தினார். இறுதியில் ராகுல் கந்தியையும் சந்தித்து கூட்டணியை அறிவித்தார். இந்த முயற்சியின் விளைவாக நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் சந்திரபாபு நடத்தி முடித்தார்.
இதில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது 5 மாநில சட்டசபை தேர்தல்கள்தான். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. இதனால், மக்களவை தேர்தலுக்கு புதுபலம் கிடைத்துவிட்டதாக காங்கிரஸ் நினைத்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்தில் இருக்கும் கட்சிகளுக்கும் இது நம்பிக்கை அளித்தது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திடீரென ஸ்டாலின் அறிவித்ததும் அதன் அடிப்படையில் இருக்கலாம்.
இப்படி காங்கிரஸ் Vs பாஜக என்ற களம் தெளிவாகி இருந்த நிலையில், சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணிக்கான புதிய இன்னிங்சை தற்போது தொடங்கியுள்ளார். இந்தமுறை சந்திரசேகர் ராவ் ஒரு மாதிரியான திட்டமிடலுடன் களமிறங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
முதலில் சட்டசபை தேர்தலில் அடைந்துள்ள மாபெரும் வெற்றி அவருக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது. தேர்தல் வெற்றி வந்தவுடன், தன்னுடைய மகன் கே.டி.ராமா ராவை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். தேசிய அரசியல் கவனம் செலுத்தும் நோக்கிலே தன்னுடைய மகனிடம் மாநில பொறுப்புகளை விட்டுவிட்டதாக கூறப்பட்டது.
தேசிய அரசியலில் ஈடுபட ஏற்கனவே தன்னுடைய மகள் கவிதாவை சந்திரசேகர் ராவ் தயர்படுத்தி இருந்தார். கவிதா தற்போது நாடாளுமன்ற எம்.பியாக இருக்கிறார். அதனால், தேசிய அரசியலில் தன்னுடைய முயற்சியில் மகளை இணைத்து அவர் பயணிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில்தான், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணிக்கான முயற்சியாக ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்தார். புவனேஸ்வர் நகரில் உள்ள நவீன் பட்நாயக்கின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புக்கு பின்னர் பேசிய சந்திர சேகர் ராவ், “புதிய அணியை உருவாக்குவாதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்படும். ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும். மீண்டும் சில நாட்களில் சந்திப்போம்” என்றார்.
இதனையடுத்து, மாலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். மம்தா உடனான சந்திப்புக்கு பின்னர் பேசிய சந்திரசேகர் ராவ், “எங்களுடைய பேச்சுவார்த்தை தொடரும். கூடிய விரைவில் உறுதியான திட்டத்துடன் வருவோம். காங்கிரஸ், பாஜக அல்லாத அணிக்கான என்னுடைய முயற்சி தொடரும்” என்றார்.
சந்திரசேகர் ராவ் இரண்டு முக்கிய நோக்கங்களை வைத்து அணி திரட்டுவதாக சொல்கிறார். ஒன்று காங்கிரஸ், பாஜக அல்லாத அணி. இரண்டாவது மாநில கட்சிகள் ஒன்றிணைவது. மம்தா, நவீன் பட்நாயக், ஸ்டாலின் உள்ளிட்டோர் மாநில கட்சிகள் என்ற அடிப்படையில் வருவார்கள்.
ஆனால், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீது காங்கிரஸ் வைக்கும் முக்கியமான விமர்சனம், அது பாஜகவின் ‘பி’ டீம் என்பதுதான். சந்திரசேகர் ராவின் இந்த முயற்சி தன்னுடைய கூட்டணி அமைக்கும் முயற்சியில் குழப்பத்தில் ஏற்படுத்தவே என்று காங்கிரஸ் பார்க்கிறது. மம்தா, மாயாவதி, அகிலேஷ் உள்ளிட்டோர் காங்கிரஸ் உடனான கூட்டணியை இன்னும் உறுதியாக அறிவிக்காத நிலையில், அதனை சாதகமாக்கி தனது புதிய முயற்சியை தொடங்கியுள்ளார் சந்திரசேகர் ராவ்.
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளின் உதவி தேவையா? அல்லது மாநில கட்சிகளுக்கு காங்கிரஸின் உதவி தேவையா? என்பதுதான். காங்கிரஸ் உதவி இல்லாமலே மேற்குவங்காளத்தில் வெற்றி பெற முடியும் என்றால் காங்கிரஸ் உடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மம்தா உள்ளிட்டோர் யோசிக்கலாம்.
ஆனால், ஏதோ ஒரு வகையில் தேசிய முகத்திற்கு மம்தா, மாயாவதி உள்ளிட்டோர் ஆசைப்படுகிறார்கள். இதனை சந்திரசேகர் ராவ் தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கலாம். இருப்பினும், 5 மாநில தேர்தல் முடிவுகள் இந்த முயற்சிக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.