டிரெண்டிங்

சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ! சிக்கலில் அமமுக வேட்பாளர்கள்

Rasus

அமமுக வேட்பாளர்களின் பெயரையொத்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக அமமுக வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்றம் வரை டிடிவி தினகரன் சென்ற நிலையில் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அமமுகவிற்கு பொதுச் சின்னம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அமமுக வேட்பாளர்களின் பெயரையொத்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 இடங்களில்  குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருவாரூர், பாப்பிரெட்டிபட்டி, கரூர், சாத்தூர் ஆகிய சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களின் பெயரையொத்த, சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அந்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. டிடிவி தினகரன் அமமுகவிற்கு குக்கர் சின்னம் கேட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஒதுக்கவில்லை. ஆனால் தற்போது அமமுக வேட்பாளர்களின் பெயரையொத்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனால் தேர்தலில் வாக்களிக்கும்போது வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.