டிரெண்டிங்

“கருவை கலைக்குமாறு பணம் கொடுத்தார்கள்.. மறுத்தோம்” - திருச்சி சிறுமியின் பெற்றோர்..!

webteam

திருச்சியில் காதல் மோசடியில் கர்ப்பமாகி தற்கொலை செய்த சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக பேட்டியளித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகளான சிறுமியை, புதுக்கோட்டை மாவட்டம், பகவான்பட்டியை சேர்ந்த ராம்கி (22) என்ற இளைஞர் காதல் என்ற பெயரில் மோசடி செய்து கர்ப்பாக்கினார். அத்துடன் சிறுமியை ஏமாற்றிவிட்டு, காதலை முறித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி காவல்நிலையத்தில் புகாரளிக்க, முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு ராம்கி மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதற்கிடையே மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியின் படி, ஏமாற்றிய இளைஞர் சிறுமியின் அத்தை மகன் என்பது தெரியவந்துள்ளது. சிறுமியின் தந்தைக்கு தங்கை மகனான ராம்கி சிறுமியுடன் காதல் ஆசை கூறி பழகி, கர்ப்பமாக்கியுள்ளார். இதையறிந்து சிறுமி பெற்றோர் கொந்தளிக்க, ராம்கி மீது நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் வழக்கறிஞர் வீட்டில் ராம்கியை தங்க வைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் கூறினர்.

மேலும், “கருவை கலைத்துவிட பணம் கொடுப்பதாக கூறினர். பணத்தை வாங்க மறுத்து விட்டோம். இதனால் எங்களிடம் தகராறுக்கு வந்தனர். எங்களுக்கு படிப்பறிவு இல்லாதததால் எங்களை ஏமாற்றி விட்டனர்” என்று சிறுமியின் பெற்றோர் கதறுகின்றனர்.