டிரெண்டிங்

“ஆடியோவில் உள்ளது எனது குரலே அல்ல” - அமைச்சர் ஜெயக்குமார்

rajakannan

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் உரையாடுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், ‘உதவி கேட்டு வந்த தன்னுடைய பெண்ணை கர்ப்பமாக்கி வீட்டீர்கள். இப்போது கலைக்க சொல்கிறீர்கள். பணம் எதுவும் வாங்காமல் எப்படி கலைப்பது” என்று அந்தப் பெண் பேசுவது போல் உள்ளது. 

அந்த ஆடியோவில் எந்த ஒரு இடத்திலும் தமிழக அமைச்சர் என்றோ, ஜெயக்குமார் என்றோ குறிப்பிடவில்லை. அந்த ஆடியோவில் உள்ள குரல் அமைச்சர் ஜெயக்குமார் போல் உள்ளது என்ற காரணத்திற்காக இந்த ஆடியோவில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார்தான் என்பது போல் செய்தி பரவி வருகிறது. இந்த ஆடியோ குறித்து எந்த முழு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் ஆடியோவை போலியாக தயார் செய்துள்ளனர். போலியாக ஆடியோவை தயார் செய்து வெளியிட்டோர் பின்னணியில் சசிகலா, டிடிவி குடும்பத்தினர் உள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். இதற்கு முன்பும் என்மேல் அவதூறு பரப்ப இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. சிறுநரிகளின் கூட்டத்திற்கு அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. 

டி.ஜெயக்குமார் என்று உலகத்தில் நான் ஒருவன்தான் இருக்கிறேனா?. போலி ஆடியோ பின்னணியில் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக புகார் அளிப்பேன். வழக்கு தொடர்வேன்” என்றார்.